கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என்று மருத்துவமனையில் விஜயகாந்த் உடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்துக்கு கடந்த 18 ஆம் தேதி மாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்தது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் அவருக்கு நுரையீரலுக்கு சிகிச்சை அளிக்க 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தொண்டர்களும் ரசிகர்களும் வேதனை அடைந்தனர். சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டு, கேப்டன் நலமாக இருக்கிறார். அவர் வீடு விரைவில் திரும்புவார், நம்மை எல்லாம் சந்திப்பார். அதுவரை எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். மருத்துவமனை அறிக்கை என்பது வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மருத்துவமனையில் விஜயகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரின் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கியுள்ளார்.
இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். - திருமதி. பிரேமலதா விஜயகாந்த்,” என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த், ”கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நான் வீடியோ ஒன்றை வெளியிட்டேன். அதில் கேப்டன் நலமுடன் இருப்பதாக கூறி, யாரும் வீண் வதந்திகளை பரப்ப வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், விஜயகாந்த்க்கு ட்ரக்கியாஸ்டமி செய்யப்பட்டதாகவும், வெண்டிலேசனில் உள்ளதாகவும், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் கேப்டனை சந்தித்து எனக்கு ஆறுதல் கூறியது போலவும், தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது தே.மு.தி.க தொண்டர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், சொந்தங்கள் என அனைவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
ஆனால், நாங்கள் மருத்துவமனையில் கேப்டன் கூட இருக்கிறோம். கேப்டன் நல்ல நிலையில் இருக்கிறார். எனவே மனிதநேயத்தோடு வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள். இன்னும் 2 நாட்களில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். வெகு விரைவில் கேப்டன் வீடு திரும்ப இருக்கிறார். உங்களை கண்டிப்பாக சந்திப்பார். நானும் சண்முகபாண்டியனும் கேப்டனுடன் எடுத்த புகைப்படங்களை இதோடு பகிர்ந்து இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“